செவ்வாய், 3 ஜூன், 2014

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது!

கருத்துரை;-சொளந்தரராசன்

இலங்கைக்கு இந்தியா கட்டளையிட முடியாது - இலங்கை 
 
இலங்கை அரசுக்கு இந்தியா கட்டளையிட முடியாது என்று அந்நாட்டு ஆளும் கட்சியான இலங்கை விடுதலைக் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையிலான 13-வது சட்டத் திருத்தத்தை அந்நாட்டு அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திய அரசு அண்மையில் வலியுறுத்தி உள்ள நிலையில், டிசில்வா இவ்வாறு கூறியுள்ளார்.
 
இலங்கையில் வாழும் மக்களுக்கு எந்த வகையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து கட்டளையிட இந்தியாவுக்கோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ உரிமையில்லை.  இலங்கைப் பாராளுமன்றத் தேர்வுக் குழு தான், அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிப்பதற்கான அமைப்பாகும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை இலங்கைப் பாராளுமன்றம் தான் எடுக்க முடியும். இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து எப்படி இலங்கை அறிவுரை கூறுவதில்லையோ, அதேபோல் இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கு எந்த வகையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதை இந்தியா கூறக்கூடாது. 1987-ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்தான், 13-வது சட்டதிருத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று. - என்று இலங்கை அரசின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் இன்று நேற்றல்ல,ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிராக உள்ளது.காங்கிரசும் முடிந்த வரையில் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தது என்பதே உண்மை.
 
ஆனால் புதிய அரசின் வலியுறுத்தலுக்கு இலங்கையிடம் இருந்து இந்தியாவுக்கு இந்த பதில் எதிர்பார்த்த ஒன்று தான்.
 
இலங்கை அரசின் நிலைப்பாட்டை பற்றி, இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக குறிப்பிட்டு,தமிழக அரசின் அழுத்தத்தை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும் நீதியில்லை,
 
இருக்கும் தமிழர்களுக்கும் வாழ உரிமையில்லை.
 
இந்திய அரசு இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை. மிகவும் சரி. ஆனால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு உடன்பட்டது.
 
கடந்த அரசை போலவே எந்த வித உறுதியான நிலைப்பாடும் எடுக்கவில்லையெனில் இலங்கைக்கு நேரடியாக இந்தியா ஆதரவு என்று தெரிவித்துவிடலாம்...!
 
நடந்ததும், நடப்பதும் போர் அல்ல...படுகொலை....!
 
 
ரௌத்திரம் பழகு.
best links in tamil
More than a Blog Aggregator

0 கருத்துகள்: