ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஆடி-18 மாவீரனுக்கு வீரவணக்கம்!தமிழ்தேசியப் போராளியின் விடுதலைக்கனவு


 தீரன்சின்னமலையின் வரலாற்று சுருக்கம்!
லகம் தோன்றிய நாள் முதல் மனிதகுல வரலாற்றில் ஆண்டான் அடிமைச்சாசனம் கால இடைவெளி இல்லாமல் அனைத்து நூற்றாண்டுகளிலும் இடைவிடாது நடந்துவரும் சமூக-வன்கொடுமை ஆகும்.அத்தகைய அடிமைத்தனத்திற்கு எதிராக தனி மனிதர்களின் தலைமையில் போராளிக்குழுக்கள் தோன்றுவதும், வீழ்வதும் ஒரு கட்டத்தில் வெற்றிபெறுவதும் வரலாற்று நிகழ்வுகள்.

 நமது பாரததேசம் தொடர்ந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக மொகளாயர்கள் மற்றும் வெள்ளையர்களின் கீழ் அடிமைப்பட்டு ஏராளமான இயற்கை வளங்களை அந்நியர்களிடம் அள்ளிக்கொடுத்தோம். முதல் இந்திய சுதந்திரப்போராட்டம் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் புலித்தேவன்,வீரபாண்டியகட்டபொம்மன் இவர்களுக்கு பிறகு மருதுசகோதரர்கள், வேலுநாச்சியார்,ஊமத்துரை வரிசையில் தமிழகத்தின் இதயப்பகுதியான கொங்குநாட்டில் இருந்து நமதுதாய்த் திருநாட்டின் விடுதலைக்காக வீரமுழக்கமிட்டவன் இந்திய விடுதலைப்புலி இரத்தினம் தீரன்சின்னமலை

 கொங்கு 24நாடுகளில் இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் நாட்டில் மேளப்பாளையம்-கிராமத்தில் வாழ்ந்த கொங்குவேளாளர்சாதீ- பயிரன் கூட்டத்தைச்சார்ந்த இரத்தினம்-பெரியாத்தாள் தம்பதிகளுக்கு 17-4-1756 அன்று இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் தீர்த்தகிரிக்கவுண்டர் என்னும் தீரன்சின்னமலை.

தனது இளைமைப்பருவத்தில் சிலம்பாட்டம்,வில்வித்தை,கிணறு தாண்டுதல்,குதிரை ஏற்றம்,வேட்டையாடுதல் போன்ற வீரவிளையாட்டுகளில் தனிச்சிறப்புடன் திகழ்ந்தவர்.கொங்குநாடு அப்பொழுது மைசூர் மன்னர் ஹைதர்அலியின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.கொங்குநாட்டு வரிப்பணம் சங்ககிரி திவான் மூலமாக மைசூராருக்கு சென்றது.


வடக்கே சென்னிமலை,தெற்கே சிவன்மலை,கிழக்கே அரச்சலூர் தலவுமலை இதன் மத்தியில் அடர்ந்த வனப்பகுதி.இங்கு தீரன்சின்னமலை தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் வேட்டைக்குச் செல்வது வழக்கம்.அப்படி ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்பொழுது தாராபுரம் வேலாயுதக்கவுண்டரிடம் வசூலித்த வரிப்பணத்தை எடுத்துக்கொண்டு சங்ககிரியை நோக்கி சென்ற இரண்டு குதிரை வீரர்களிடம் இருந்து வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு கொடுத்தார் சின்னமலை.

.
அப்பொழுது சிவன்மலைக்கும்-சென்னிமலைக்கும் இடையே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டதாக உமது திவானிடம் போய்ச்சொல் என்று தீரன்சின்னமலை முழங்கினார்.அதன் பிறகுதான் தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் தீரன்சின்னமலையாக மாறியது. இந்த நிகழ்வை சங்ககிரி திவான்-மைசூர் மன்னரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.கோபம் கொண்ட மைசூர்மன்னர் ஹைதர்அலி குதிரைப்படை ஒன்றை அனுப்பி சின்னமலையை கைது செய்து இழுத்துவர பணித்தார்.ஆனால் திவானின் குதிரைப்படையை சின்னமலையின் தடிக்காரப்படை அடித்துநொறுக்கி விரட்டி அடித்தது.

7-12-1782-இல் ஹைதர்அலியின் மறைவிற்குப் பின் திப்புசுல்தான் மைசூர் அரசர் ஆனார்.மைசூராரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளை கிழக்கிந்தியக்கம்பெனி கபலீகரம் செய்ய திப்புவிற்கு எதிராக கடும்போர் நடத்தி வந்தனர்.இத்தகைய அவசர காலத்தில் கொங்குநாட்டு வரிவசூலுக்கு எதிராக சின்னமலை வீரத்துடன் தடுத்து நிறுத்தி போரிடுவது திப்புவை வெகுவாக கவர்ந்தது.சின்னமலையிடம் சண்டையிட்டு உள்நாட்டு போரில் கவனம் செலுத்துவதைவிட-நம்மோடு இணைத்துக்கொண்டு நமது மண்ணின் பொது எதிரியான வெள்ளையர்களை விரட்டியடிக்க திப்பு விவேகமாக உறுதிபூண்டு சின்னமலைக்கு தூது அனுப்பினார்.

மண்ணின் பொது எதிரியை வீழ்த்தும் திப்புவின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சின்னமலை ஆயிரம் இளைஞர்கள் கொண்ட கொங்குபடையை மைசூருக்கு அழத்துச்சென்றார்.அங்கு திப்புவின் தளபதிகள் மற்றும் பிரஞ்ச் படைவீரர்கள் கொண்டகுழு கொங்குபடைக்கு முறைப்படி போர்ப்பயிற்சி அளித்தனர். கொங்குபடை மழவல்லி,சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.குறிப்பாக மழவல்லிப் போரில் 40,000 வீரர்கள் கொண்ட வெள்ளைப்படைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
நடிகர் சிவகுமாரால்
வரையப்பட்ட ஓவியம்

மாவீரன் நெப்போலியனிடம் உதவி வேண்டி திப்பு அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வை தேவர் இடம் பெற்றிருந்தார்.



4-5-1799-இல் நான்காம் மைசூர்போரில் கன்னட நாட்டின்போர்வாள் திப்பு கொல்லப்பட்டார்.திப்புவின் வாரிசுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.சின்னமலையின் உற்ற நண்பன் வேலப்பன் வெள்ளையப்படையினரால் கைது செய்யப்பட்டார்.அதன் பிறகு சின்னமலை கொங்குநாடு திரும்பினார்.அரச்சலூர் ஓடாநிலையில் கோட்டை-கொத்தளங்கள் அமைத்து தம்மை கொங்குநாட்டின் பாளைக்காரனாக அறிவித்துக்கொண்டார்

.பிற பாளையக்காரர்களுக்கும் தூது அனுப்பி வெள்ளையர்களை விரட்டி அடிக்கவேண்டும்,அதற்கு நமது ஒற்றுமை அவசியம் என்பதை வழியுறுத்தினார்.சின்னமலையின் வெள்ளை எதிர்ப்புக் கூட்டமைப்பில் வேளாளர்,நாயக்கர்,வேட்டுவர்,ஆதிதிராவிடர்,தாழ்த்தப்பட்டோர்,தேவர்,நாடார்,
வன்னியர்,இஸ்லாமியர் என்று பலர் இருந்தனர்.


அவர்களில் கருப்பசேர்வை,ஓமலூர்சேமைலைப்படையாட்சி,
சென்னிமலைநாடார்,முட்டுக்கட்டைபெருமாத்தேவன்,பத்தேமுகமதுஉசேன்,
விருப்பாட்சிகோபாலநாயக்கர்,சுபேதர்வேலப்பன்,செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

முந்தைய காலகட்டத்தில் (18-4-1792-இல்) அனுமந்தராயர் என்ற வேட்டுவக்கவுண்டரிடம் காங்கயம்-சிவன்மலை பட்டாலிகிராமத்தில் தமது பெயரில் விலைக்கு வாங்கிய இடத்தில் போர்ப்பாசறை அமைத்து ஆயுதங்கள் தாயாரித்து-வீரர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்தார்.பிரஞ்சு வீரர்களின் துணையுடன் சிறுரக பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டது.

 திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாகின் திட்டப்படி சில பாளையக்காரர்களின் துணையுடன் கோவைக்கோட்டையை தகர்த்து லெப்டினன்ட் கர்னல் க்ஸிஸ்டரின் தலைமையிலான 5-ஆம் கம்பெனியின் பட்டாளத்தை அழிக்க சின்னமலை திட்டமிட்டார்.ஒருநாள் முன்னதாகவே போராளிகள் அறிவிப்பின்றி செயல்பட்ட காரணத்தால் கோவைப்புரட்சி தோழ்வியில் முடிந்தது.

வெள்ளையர்களுக்கு எதிரான போரில் 1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும்,1802-இல் ஓடாநிலையிலும்,1804-இல் அறச்சலூர் போரிலும் தீரன்சின்னமலையின் படை பெறும் வெற்றி பெற்றது.ஓடாநிலைப்போரில் வெள்ளைத்தளபதி கர்னல் மேக்ஸ்வெல்லின் தலையைக் கொய்து கரும்புள்ளி,செம்புள்ளி குத்தி ஊர்வலம் விடப்பட்டது.சின்னமலையின் ஓடாநிலைக்கோட்டையை கடந்துதான் கேரளத்தின் மலபார் பகுதிகளுக்கு வெள்ளையர்கள் செல்லவேண்டும்.அதற்கு சின்னமலையின் காவிரிக்கரைப்படை பெறும் தடையாக இருந்தது.

போரில் வெற்றி பெறமுடியாத வெள்ளையர்கள் கொங்குநாட்டின் ஆட்சிப்பொறுப்பை விட்டுத்தருவதாகவும்-வரிவசூலின் மூன்று பகுதியை எடுத்துக்கொள்ளவும் வேண்டி சின்னமலைக்கு சமரசம் செய்து கொள்ள தூது அனுப்பினார்கள்.அதை ஏற்றுக்கொள்ள மறுத்த சின்னமலை-தொடர்ந்து போராட தனது படையை பலப்படுத்தினார்.

சென்னை கிண்டியில்
உள்ள சிலை
இந்த நிலையில் பிரிட்டன் ஏகாதிபத்தியம் தமக்கு எதிராக-தடுக்க முடியாத கடல் அலையாக வளர்ந்து வரும் தீரன்சின்னமலையை ஒழித்தே தீரவேண்டும் என முடிவுசெய்தது.கொல்கத்தா தலைமையகத்தில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கைகள் கொண்ட பெறும் பீடங்கிப்படை ஒன்று ஓடாநிலைக்கோட்டையை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.

சின்னமலையின் போர்ப்படைத் தளபதியும்-உற்ற நண்பனுமான சுபேதார்வேலப்பன் வெள்ளைப்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டு வெள்ளைப்படையில் சுபேதராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.ஆங்கிலேய அதிகாரிகளிடம் நம்பிக்கைக்கு உரியவராக தன்னை வளர்த்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஓலையின் வாயிலாக வெள்ளைப்படையின் நடவடிக்கைகளை ரகசியமாக சின்னமலைக்கு அனுப்பி வந்தார்.

அதன்படி செருப்புத்தைக்கும் தொழிலாளி பொல்லான் மூலமாக செருப்பின் உள்ளே வைத்து தைக்கப்பட்ட ஓலை சின்னமலைக்கு வந்து சேர்ந்தது.அந்த ஓலையில் அதிநவீன பெறும் பீரங்கிப்படை ஓன்று ஓடாநிலையை நோக்கி வருவதாகவும்-அத்தகைய படையின் முன்பு நமது மண்கோட்டையும்,போர்ப்படையும் தக்குப்பிடிக்க இயலாது என்றும்-உடனடியாக தாங்கள் தப்பிச்செல்லவேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டிருந்தது.தனது கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசித்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டையை காலி செய்து கொண்டு பழநிக்கு அருகில் உள்ள கருமலைக்குத் தப்பிச்சென்றார்.

ஓடாநிலைக்கோட்டையை அடைந்த ஆங்கிலேயப் பீராங்கிப்படையின் தளபதி சின்னமலையால் தம் படைக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமல் இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தார்.கோட்டையை சோதனையிட உத்தரவு இட்டார்.சோதனையில் பீரங்கிப்படையின் வருகை குறித்து சுபேதார்வேலப்பன்-தீரன்சின்னமலைக்கு எழுதிய ஓலை கிடைக்கப்பெற்றது.அந்த இடத்திலேயே சுபேதார் வேலப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். ஓடாநிலைக்கோட்டை பீரங்கிப்படையால் மண்ணோடு மண்ணாக தகர்க்கப்பட்டது.

போரில் வெல்லமுடியாத சின்னமலை சகோதரர்களை சூழ்ச்சியின் மூலமாக சொந்த இனத்தவர்களே காட்டிக்கொடுதார்கள்.கைது செய்யப்பட்ட சின்னமலை சகோதரர்கள்,கருப்புசேர்வையுடன் ஆடி-18 (31-7-1805) இல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.இறந்துபோன மாவீரர்களின் உடல்களை கழுகளுக்கு இறையாக்கினார்கள்.

கொங்குதமிழகத்தின் சுதந்திரதீபம் அணைந்தது..சிவன்மலையை சுற்றி இன்றும் தீரன்சின்னமலையின் நினைவுகள் சுழன்றுவருவதாக நான் நம்புகிறேன்.அடிமைத்தலைக்கு எதிரான போராட்டத்தின் மொத்தவடிவத்தை குறுகியசாதீ வட்டத்தில் வைத்து சிறுமைப்படுத்துவதை நாம் முற்றிலும் கைவிடவேண்டும்.

இத்தகைய மாவீரர்கள் எந்த விசாரணைகளும் இல்லாமல் வெள்ளை அரசாங்காத்தால் ஈவு இரக்கமில்லாமல் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.அவர்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டார்கள். ஆம் மாவீரர்கள் மீண்டும்,மீண்டும் பிறந்தார்கள்.140-ஆண்டுகளுக்கு பிறகு பாரதத்தாயின் விடுதலை மலர்ந்தது.தீரன்சின்னமலையைப் போன்ற மாவீரர்களின் கனவு பலித்தது.உலகில் மனிதஉரிமைகள் நசுக்கப்படும்பொழுது மாவீரர்கள் மீண்டும் பிறப்பார்கள்.

இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18 (3-8-11) அன்று மாவீரனின் 206- வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.

மையஅரசால் 
வெளியிடப்பட்ட 
தபால்தலை
ஈழத்தில் கடந்த முப்பது ஆண்டுகளாக சிங்களவர்களின்அடிமைச்சாசனத்தில் நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழ்மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சோகம் இந்த நுற்றாண்டின் மிகப்பெரிய மனிதகுலத்திற்கு எதிரான தாக்குதல் என்று சொன்னால்அது மிகையாகது.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் ஈழவிடுதலை போராளிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இந்த ஆண்டின் துவக்கம்வரை போராடி வீழ்ந்துள்ளார்கள்.

தீரன்சின்னமலையின் நினைவு தினமான இன்று ஈழத்தில் மீண்டும்போராளிகள் எழுவார்கள்!ஈழத்தமிழர்களின் விடுதலைக்கனவு பலிக்கும்.நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையில் தனிஈழம் ஒன்று அமைத்தே தீருவேன் என்று முழங்கினார்கள்.நிச்சயம் ஈழத்தில் தனி ஈழம் ஒன்று மலர்ந்தே தீரும் என்று நம்புவோம்.

                   தீரன்சின்னமலைக்கு அரசு அளித்த மரியாதை

முன்பு தீரன்சின்னமலை நினைவாக திருச்சியை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்துக்கழகமும், கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.சென்னை கிண்டியில் சிலை எடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு தீரன்சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டது.இந்திய அரசின் தபால் தந்தித்துறை 31-7-2005 இல் தபால் தலை வெளியிட்டது.

அம்மா அவர்களுடன் வலைதள ஆசிரியர்-
 கொங்குதமிழர்கட்சியின்
மாநிலஅமைப்பாளர் டி.கே.தீரன்சாமி
மாவீரனின் தேசப்பற்றை போற்றும் வகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாவீரனின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசுவிழாவாக தொடர்ந்து நடத்தப்படும் என்று அன்றைய முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்தார்.அத்துடன் ஓடாநிலையில் மவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து சிறப்பித்தார்.


இந்தநிலையில் எதிர்வரும் ஆடி-18(3-8-11) அன்று மாவீரனின் 206-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட உள்ளது.இந்த நினைவு தினத்தை நமது தமிழக முதல்வர் மீண்டும் அரசு நிகழ்ச்சியாக ஆவண செய்துள்ளார்!மேலும் இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்!கட்சத்தீவை மீட்கவேண்டும்!ராஜபக்சேவை போர்குற்றவாளியாக நிறுத்த வேண்டும்! உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றி சிறப்புடன் செயலாற்றிவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


200-ஆண்டுகளுக்கும் மேலாக போராடி லட்சக்கணக்கில் உயிர்களை தியாகம் செய்து வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்றோம்.ஆனால் இன்று லஞ்சம்-ஊழல் எனும் கொள்ளையர்களிடம் அடிமைப்பட்டுள்ளோம்.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊழலின் கோரவிருச்சம் தலை விரித்து ஆடுகிறது.லஞ்சம்-உழல் எனும் கொள்ளையர்களிடம் இருந்து நமது தேசத்தையும்,தேசீயத்தையும் மீட்டெடுக்க ஊழல் ஒழிப்பு முன்னனி ஒன்று தேவை.


தீரன்சின்னமலையின் வரலாற்று பதிவு அல்லது சுருக்கம் நமது தமிழ் வலைதளப்பதிவுகளில் கிடைக்கப்பெறவில்லை.எமது தீரன்சின்னமலை புலனாய்வு செய்திஊடக வலைதளப்பதிவு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.முதல் பதிவாக இந்திய விடுதலைப்புலி தீரன்சின்னமலை என்ற தலைப்பில் மூன்று பாராவில் சிறிதாக வெளியிட்டு இருந்தேன்.அது தெளிவானதாக தெரியவில்லை.இந்தப்பதிவு அந்தக்குறையை போக்கும் என்று நம்புகிறேன்.


இதில் காணப்படும் பிழைகளை எமது கருத்துரை பகுதியில் சேர்க்கவும்.இந்தப்பதிவை குறைந்தது பத்தாயிரம் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.இந்தப்பதிவினைப் படிப்பவர்கள் தங்கள் நண்பர்களுக்கு தமது பதிவாகஅனுப்பி வைக்கவும்.இந்தப்பதிவிற்கு நான் காப்புரிமை வைத்துக்கொள்ளப் போவதில்லை.யார் வேண்டுமானாலும் எடுத்து வெளியிடலாம்.


இவன்:-டி.கே.தீரன்சாமி,மாநிலஅமைப்பாளர்,கொங்குதமிழர்கட்சி மற்றும் தமிழ்நாடு தீரன்சின்னமலைபாசறை


பெறுநர்கள்:-மாண்புமிகு தமிழகமுதல்வர்,மாண்புமிகு தமிழக அமைச்சர்கள்,உயர்திரு அரசுத்துறை செயலாளர்கள்,அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்,உயர்திரு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்,மக்களவை உறுப்பினர்கள்,மத்திய அமைச்சர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,மாவட்ட காவல்துறை அதிகாரிகள்,அனத்து வார-நாளிதழ்கள்,செய்தி ஊடகங்கள்,சமுதாயத்தலைவர்கள்.

best links in tamil
More than a Blog Aggregator

1 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

மிகுந்த முயற்சி எடுத்து எழுதியிருக்கிறீர்கள். ஒருவர் கூட பின்னூட்டம் போடவில்லை என்று பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.